உலக சுற்றுச் சூழல் தினத்தை ஒட்டி வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள், கோவை துடியலூர் வார சந்தையில் நெகிழி ஒழிப்பு குறித்த நோட்டீஸ்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து, அப்பகுதிகளில் இருந்து நெகிழிகளை சேகரித்தும் தூய்மை பணியிலும் ஈடுபட்டனர்.
கோவை: துடியலூரில் உள்ள வாரச்சந்தை பகுதியில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் நெகிழி ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா செவிலியர் கல்லுரி சார்பாக இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

இத்தினத்தையொட்டி கல்லூரி மாணவர்கள் அருகிலுள்ள துடியலூர் வாரச்சந்தையை தூய்மை படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

முன்னதாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் துடியலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனியாண்டி தலைமை தாங்கி உலக சுற்றுச் சூழல் தின பலகையை திறந்து வைத்தார். கங்கா கல்லூரியின் முதல்வர் டாக்டர்.எஸ்தர் ராகேல் கொடியசைத்து நிகழ்ச்சியை ஏற்று நடத்தினார். தொடர்ந்து கல்லூரி சமுதாய சுகாதார பாடப்பிரிவு முனைவர் சசிரேகா அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் நெகிழி கழிவுகளை ஒழிப்போம் என்ற உறுதி மொழியை கங்கா கல்லூரி துணை முனைவர் ஷோபா வாசிக்க, மாணவ, மாணவிகள், அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து அப்பகுதி வியாபாரிகள் நெகிழி பயன்படுத்த மாட்டோம் என கையழுத்திட்டு பங்கேற்றனர்.

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நெகிழியினால் உண்டாகும் மாசு கழிவுகளை அறவே ஒழிப்போம் என்ற கருத்தை விளக்குவதற்காக நெகிழியினால் அலங்கரிக்கப்பட்ட ஆடை அணிந்திருந்த மாணவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்களை கையிலேந்தி நெகிழி பயன்பாட்டிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் துடியலூர் வாரச்சந்தையில் தேங்கியிருந்த நெகிழி கழிவுகளை சேகரித்த மாணவ மாணவிகள் அதனை கல்லூரி வளாகத்தில் ஒன்று சேர்த்து மறு சுழற்சிக்கான பணிகளை மேற்கொண்டனர்.