துடியலூர் அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த கணுவாய் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
துடியலூரை அடுத்த கணுவாயில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுழற்சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டித்திறப்பு விழா நடைபெற்றது.

இந்த பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக மரங்களின் நிழலில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.
இதனை கருத்தில் கொண்டு கோவை அக்மி சுழற்சங்கம் 133, கோவை யுனைடட் சுழற்சங்கம் 186, தாரணி மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.18 லட்சம் செலவில் இரு வகுப்பறைகளை புதிதாக கட்டித்தர இசைந்து கட்டிட பணிகள் நடந்து வந்தன.

பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது, இதில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாரதி செல்வம் தலைமை வகித்தார்.

சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி, சுழற்சங்கங்களின் தலைவர்கள் ஆர்.ஆர்.வித்யாசாகர், எஸ்.ராகுல் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கே.எம்.சி.ஹெச் தலைவர் நல்லா ஜி.பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் சென்ற கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவின் நினைவாக மரக்கன்றுகளும் நடப்பட்டன.