திருப்பூர் அடுத்த காதர்பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 கடைகளுக்கு மேல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில், இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
திருப்பூர்: காதர்பேட்டை பனியன் சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சியின் மையப்பகுதியான ராயபுரம் பகுதியில் காதர் பேட்டை எனப்படும் பனியன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறியது முதல் பெரியது வரையிலான பின்னலாடை துணிகள் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு 50 கடைகளுக்கு மேல் இருக்கின்ற நிலையில் வெளி மாவட்டம மற்றும் மாநிலங்களுக்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கு பனியன் துணிகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

வழக்கம்போல கடையில் அனைத்தும் 9 மணிக்குள்ளாக பூட்டப்பட்டு சென்ற நிலையில் சிறிது நேரத்தில் பனியன் பஜாரில் இருந்து தீ எரிவதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தீயை உடனடியாக அணைக்க முடியாத காரணத்தால் மாநகராட்சி தண்ணீர் வண்டிகள், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்ததன் காரணமாக நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயிர் சேதமோ ஏற்படல்லை. சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

தீயணைப்பு பணிகள் முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் காதர்பேட்டை பகுதியில் 50 கடைகளுக்கும் மேலாக தீ விபத்தின் காரணமாக சேதம் அடைந்து இருப்பதாகவும், சேதம் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் ஆய்வுக்கு பின் இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
6 தீயணைப்பு வாகனங்கள் 10க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தீ அணைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர், சப் கலெக்டர், மாநகராட்சி ஆணையர், காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடைகள் பூட்டப்பட்டு இருந்ததால் காயமோ உயிர் சேதமோ இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். பனியன் பஜாரின் மையப்பகுதியில் தீ பற்றிய நிலையில் இருபுறமும் மள மளவென தீ முழுவதும் பற்றி எரிய காரணம் எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அருகில் இருந்த கட்டிடங்களிலும் தீ பரவியதால் கட்டிடங்களுக்கும் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்கள் இந்த விபத்தால் நிலை குலைந்து உள்ளது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தங்களுக்கான இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.