உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில், சின்ன வெங்காய விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருப்பூர்: உடுமலை காய்கறி மார்க்கெட்டில் சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.185வரை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றது. சின்ன வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காதது சாகுபடி செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் சின்ன வெங்காயம் உடுமலை சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து வருகின்றது. அதாவது கடந்த சில வாரங்கள் முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது, சந்தையில் இருப்பு வைத்த நன்கு உலர்ந்த வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ஏலம் முறையில் கிலோ 185 ரூபாய்க்கும், 40 கிலோ பை ரூ.7400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சமையலில் முக்கியமாக கருதப்படும் சின்ன வெங்காயம் அதிரடி விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.