மணிப்பூர் கலவரத்தையொட்டி 2 பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கலவரத்தை தடுக்க தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் பிரதமர் மோடி பதவி விலக கோரியும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பாஜக அரசை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் பேசியதாவது,
மணிப்பூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. 2 பெண்கள் நிர்வாணமாக ஆடைகள் களையப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
பழங்குடியினர் மக்களை காக்க தவறிய மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில் மக்கள் மோடிக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.