திருப்பூர் காங்கேயம் சாலை இஸ்லாமிய அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் நடைபெறும் சம்பவம் அரசின் துணையோடு நடைபெறும் இன அழிப்பு. இதற்கு பிரதமர் மோடி, மக்களின் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மணிப்பூர் அரசை கலைத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் அரசை கலைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் பழங்குடியின பெண் இருவர் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்தும் இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி கார்னர் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத், ஒருங்கிணைந்த இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு, திருப்பூர் சாகின்பாக் போராட்ட குழு இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் சம்பவம் பாஜக அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இனப்படுகொலை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு வெளிப்படை தன்மையோடு தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமான மணிப்பூர் பாஜக அரசை கலைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.