சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக கோவை மாநகராட்சி கட்டிடம், ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் மக்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.
கோவை: சுதந்திர தின விழாவையொட்டி கோவையில் உள்ள மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளன.
சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதன் ஓரு பகுதியாக கோவையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி, மாநகர 700 போலீசாரும் புறநகரில் ஆயிரம் போலீசாரும் என 1,700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர பேருந்து நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக கோவை மாநகராட்சி பிரதான கட்டிடமான விக்டோரியா ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரில் வழக்கமான வண்ண விளக்குகளுக்கு பதிலாக தேசியக்கொடி வடிவிலான விளக்குகள் மிளர விடப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்பவர்கள் உற்சாகத்துடன் இந்த வண்ண விளக்குகளை பார்த்து செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் மீடியா டவரின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.