திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுடன் பீகார் மாநிலத்தின் திறன் மேம்பாட்டு இயக்க அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப நாங்க தயார் எங்களுடன் கைகோர்க்க நீங்க தயாரா என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்பார்ப்பதாக பீகார் மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருப்பூர்: பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணிக்கு அனுப்ப நாங்க தயார் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்துக்கு ஒப்பந்தம் போட தயாரா என பீகார் மாநில அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுடன் பீகார் மாநிலத்தின் திறன் மேம்பாட்டு இயக்கத்தின் அதிகாரிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திருப்பூர் ஏற்றுமதி அளவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன், செயலார் திருக்குமரன், பீகார் மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்தின் கூடுதல் முதன்மை செயல் அதிகாரி ராஜீவ் ரஞ்சன், திறன் மேம்பாட்டு இயக்குனர் சஞ்சய் குமார் மற்றும் பல்வேறு அதிகாரிகள் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தொழிலாளர்களின் நலன் பற்றியும் அவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பீகார் மாநிலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்திலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு பின்னல் ஆடை தொழிலுக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. எனவே பீகார் மாநில அரசு தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு இயக்கத்தை ஊக்குவித்து வருகிறது,
இதன் மூலம் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகளை கொடுத்து அவர்களின் திறமைகளை வெளிக் கொணரும் முயற்சியில் இறங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை துறையில் பணியாற்ற ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று மாதம் பயிற்சி கொடுத்து அதன் பின்னர் பணியில் அமர்த்தும் சூழல் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்ட பீகார் மாநில அரசு திறன் மேம்பாட்டு இயக்கம் மூலம் தொழிலாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கி, உடனடியாக பணிகளை மேற்கொள்ளும் அளவிற்கு தயார் செய்து வருகிறது,
இதன் மூலம் தொழில் தெரிந்த தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்வர வேண்டும். இதற்காக பீகார் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் பதில் அளிக்கப்படும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.