திருப்பூரில் நடைபெற்ற மோட்டார் வாகன ஆலோசர்கள் பொதுக்குழு கூட்டத்தில், வட்டார போக்குவரத்து துறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் என்றும், போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் அபராத தொகையை கையோடு பெற்றுக்கொள்ளும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
திருப்பூர்: போக்குவரத்து போலீசார் பொதுமக்களிடம் அபராத தொகையை கையோடு பெற்றுக்கொள்ளும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும் என மோட்டார் வாகன ஆலோசர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மோட்டார் வாகன ஆலோசகர்கள் பொதுக்குழு கூட்டம், தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் மாநில சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கொடி அறிமுக விழா என முப்பெரும் விழாவானது திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டமானது தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்க மாநில தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் மாநில தலைவர் அறிவழகன் பேசியதாவது,
பொதுமக்களுக்கும்., வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமானது நடத்தி வருகிறோம்.
வட்டார போக்குவரத்து துறையில் பெயர் மாற்றம், எச்.பி கிளியரன்ஸ்உள்ளிட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்து பழைய நடைமுறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் வாகன ஓட்டிகள் அத்துமீறும் போது போக்குவரத்து போலீசார் அத்துமீரும் வாகன ஓட்டிகளிடம் முந்தைய காலக்கட்டத்தில் இருந்தது போல வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து கையோடு அபராதம் தொகையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
குறுஞ்செய்திகளாக செல்போன்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் பார்ப்பதில்லை. வாகனங்களை விற்கும் போதுபோக்குவரத்து போலீசாரின் அபராதங்களை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் உள்ள சிக்கல்களை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.