வட இந்தியர்கள் இங்கு வந்து வாழ்வதிலும் பணியாற்றுவதிலும் பிரச்சனை இல்லை. நாளை குடியுரிமை பெற்று அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள். அதுதான் பிரச்சனை என திருப்பூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திருப்பூர்: சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டது தேர்தலை கருத்தில் கொண்டுதான். தேர்தல் முடிந்தவுடன் சந்திராயன் போல சிலிண்டர் விலை உயரும். இதனை மக்கள் நம்பி விட வேண்டாம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் தற்சார்பு பொருளாதாரம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது மேடையில் அவர் பேசியாதவது,
சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டது தேர்தலை கருத்தில் கொண்டுதான். தேர்தல் முடிந்தவுடன் சந்திராயன் போல சிலிண்டர் விலை உயரும்.. இதனை மக்கள் நம்பி விட வேண்டாம். எத்தனை முறை தோற்றாலும் நான்தான் முதல்வன்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கானாலும், தொழிலாளர்களுக்கானாலும் எந்த ஒரு பிரச்சனையானாலும் நான் முன் நினறு போராடுகிறேன். அதுவே எனக்கு மன நிறைவை தருகிறது. நம்மை ஏமாற்றுபவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்த மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பளித்து பாருங்கள். ஐந்து வருட கால ஆட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள். உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோம்.
கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வோம். மாறாக தற்போது கார் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உணவுப் பொருட்களை மற்ற நாடுகளிடம் கையேந்தி காத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சீமான் எப்போதும் தனித்து நிற்பதில்லை எட்டு கோடி மக்களின் பெரும் ஆதரவோடு தேர்தலை சந்தித்து வருகிறேன். தேர்தல் நேரத்தில் இன்னும் பல வாக்குறுதிகள் அளிக்கலாம். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
வட இந்தியர்கள் இங்கு வாழ்வதிலும் பணியாற்றுவதிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் குடியுரிமை பெற்று இங்கு அரசியலையும் அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வருவதுதான் பிரச்சனை. தான் சொந்த மண்ணிலேயே நாம் அடிமையாக இருக்கிறோம். இவ்வாறு சீமான் பேசினார்.
பொதுக் கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி சார்பாக சீமானுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.