அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அனைவரும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும் மௌனானந்தர் கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருப்பூர்: அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என மௌனானந்தர் கலை குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம் பாளையம் கிராமத்தில் காளியம்மன் கோவில் வளாகத்தில் மௌனானந்தர் கும்மி கலை குழுவினர் சார்பில் 8வது அரங்கேற்ற விழா வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஒரே இடத்தில் 200 கலைஞர்கள் கொங்கு பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் ஆடி விநாயகர் துணையுடன் முருகப்பெருமானை திருமணம் செய்தது வரையிலான பாரம்பரிய நாட்டுப்புற பாடல்களை பாடியபடி நடன அசைவுகளுடன் நடனம் ஆடி அசத்தினர்.
இதைக் காண தாராபுரம், அலங்கியம் தளவாய்பட்டிணம் சத்திரம் கோவிந்தாபுரம் நஞ்சியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வள்ளி கும்மியாட்டத்தை கண்டு களித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வள்ளி கும்மி ஆசிரியர் வரப்பாளையம் சண்முகசுந்தரம், தலைமை வகித்தார்.கனகராஜ், ஈஸ்வரன், செல்வராஜ், ஆகிய இணை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து வள்ளி கும்மியாட்ட ஆசிரியர்கள் கூறியதாவது, கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மியாட்டக் கலை புத்துயிர் பெற்று வருகிறது. பண்டைக் காலத்தில் கும்மி ஆட்டம் அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வந்துள்ளது.
கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் கோவில் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.
நாட்டுப் புறப்பாடல்களும், பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு. அகநானூற்றிலும், சிலப்பதிகாரத்திலும் கும்பி பற்றிய குறிப்புகள் உள்ளன.
திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி வளர்ச்சியாலும், மேற்கிந்திய இசையான பேண்டு வாத்தியம், இன்னிசை கச்சேரி போன்றவற்றாலும் வள்ளி கும்மி மீது மக்களுக்கு நாட்டம் குறைய தொடங்கியது.
அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் இலவசமாக அளித்து வருகின்றனர்.
மேலும் அரசு விழாக்களில் வள்ளி கும்மியாட்டத்தை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் வள்ளி கும்மியாட்ட குழுவினரை நல வாரியத்தில் இணைக்க வேண்டும். இந்த பாரம்பரிய வள்ளி கும்மி ஆட்டத்தை உலகறிய செய்ய வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
அரசு பள்ளிகளிலும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். அனைவரும் வள்ளி கும்மியாட்டத்தை கற்றுக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை தரும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.