திருப்பூர் அவிநாசி மங்கலம் புறவழி சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: அவிநாசி மங்கலம் புறவழிச் சாலையில் படுத்துறங்கிய பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு, பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் புறவழிச் சாலை அருகேயுள்ள கடை முன்பாக ஆதரவற்ற நிலையில் பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். நேற்று இரவு கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் அருகே கல்லை தூக்கி கொண்டு வந்த நபர் ஒருவர் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத மழை நீர் வடிகாலுக்கு இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், காலையில் சடலத்தை மீட்ட அவிநாசி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான பெண் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம்.
இதனை அறிந்த நபர் ஒருவர் வன்புணர்வு செய்வதற்காக கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின் வன்புணர்வு செய்யப்பட்டாரா என்பது முழுமையாக தெரியவரும். மேலும், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.