பொள்ளாச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தில் பேசிய அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன், கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என்று கூறினார்.
கோவை: கோவை என்ற அதிமுகவின் கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போடமுடியாது என்பதை நிரூபித்து காட்டியது கோவை மாவட்டம் என அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் அதிமுக இலக்கிய அணி செயலாளருமான வைகைசெல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் வைகைச்செல்வன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை. அந்த கட்சி அவ்வளவு தான் என பேசினார்கள். ஆனால், நாட்டின் 3வது பெரிய கட்சியாக திகழ வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.
கோவை மாவட்டமானது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை 6 முறை முதலமைச்சராக மாற்றி அவரது கொள்கை மற்றும் கோட்பாட்டை கோவை மாவட்டம் தூக்கிச் சுமந்து வருகிறது.
கோயம்புத்தூர் என்று சொன்னால் அதிமுகவின் கோட்டை, இந்த கோட்டைக்குள் எந்த கொம்பனும் ஊடுருவி ஓட்டை கூட போட முடியாது என்பதை நிரூபித்து காட்டுகிற கோவை மாவட்டம்.
சிறையில் உள்ள செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்தது ஏன்?. நாட்டில் எந்த மாநிலத்திலாவது ஒரு அமைச்சராவது சிறையில் இருக்கிறாரா. அவரை பதவியை விட்டு இறக்காதது ஏன்?. இதனை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.