மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு, கைகலப்பு - தர்ணா, உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தை நகராட்சி கமிஷனர் இன்றி கூட்டம் நடத்தக்கூடாது என்றும் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக்கூறி அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


கோவை: நகர்மன்ற கூட்டத்தில் நாற்காலியை துாக்கி ஏறிந்த தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அதிமுக கவுன்சிலர்கள் கூறினர்.

மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தீர்மானங்கள் மீதான விவாதங்கள் தொடங்கியபோது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சுனில் குமார், தனசேகர், சலீம் ஆகியோர் பேசுகையில், நகராட்சி கமிஷனர் இன்றி கூட்டம் நடத்தக்கூடாது.

கமிஷனர் மட்டுமின்றி உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இப்படி இருக்கையில் குறைகளை யாரிடம் சொல்வது. அதிகாரிகள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள், இக்கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும்,என்றனர். மேலும், மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் துாய்மை பணி சரிவரமேற்கொள்ளப்படவில்லை.

இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை என்று புகார் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி தலைவர், 'நகராட்சி கமிஷனர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர், அவர்களது மேல் அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர். நான் கூட்டத்தை நடத்துகிறேன்.

மக்கள் பிரச்சனை தொடர்பாக விவாதிக்கலாம் என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர் தனசேகரன், தர்ணாவில் ஈடுபட்டார். பின் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், சுனில்குமார், சலீம், விஜயலட்சுமி, குருபிரசாத், மீரா மைதீன், கலைச்செல்வி, மருதாசலம், ராஜேஷ் ஆகியோர் நகர் மன்ற தலைவர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிலர், தலைவர் மெஹரீபாபர்வீன் அமர்ந்திருந்த நாற்காலி அருகே சென்று முற்றுகையிட்டு, குப்பை எடுக்கப்படவில்லை. நாறி கிடக்குது நகராட்சி என தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, அங்கு வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் ரவிக்குமார், ஸ்ரீ ராம், அ.தி.மு.க., கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியநிலையில், தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார், தன்னை ஒருமையில் பேசியதாக கூறி, நாற்காலியை எடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வீசினார். மேலும் மேஜையில் இருந்த பொருள்களை எடுத்து அவர்களை தாக்க முயற்சி செய்தார்.

இதனால் தி.மு.க.,-அ.தி.மு.க., கவுன்சிலர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கூட்டத்தில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி கூட்ட அரங்கில் தர்ணாவில் ஈடுபட்டனர். தலைவர், கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன என்று கூறி கூட்டத்தை முடித்து அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார். தீர்மானம் எதுவும் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டன. தலைவரின் இந்த போக்கை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நடந்த சம்பவம் தொடர்பாக புகார் மனு எழுதி கொடுத்தனர். உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள்,சுனில்குமார், சலீம், விஜயலட்சுமி, குருபிரசாத், மீரா மைதீன், கலைச்செல்வி, மருதாசலம், ராஜேஷ் ஆகியோர் நேற்று இரவு வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாற்காலியை துாக்கி ஏறிந்த தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...