5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே உள்ள அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. எனவே அரசியல் கட்சி கொடிக்கம்பம், பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது. அரசு பொதுச்சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், கட்சி சின்னங்கள்,கொடிகள் போன்றவை வரையப்பட்டிருந்தால் அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகிறார்கள். அரசியல் தலைவர்களின் சிலைகளும் மறைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அண்ணா சிலை, காந்திசிலை, உடுமலை ரோட்டில் உள்ள பெரியார் சிலை, 5 சாலை சந்திப்பில் நூலகம் அருகே கட்சியினர் சுவர் விளம்பரங்கள், மேலும் வார்டு பகுதியில் உள்ள கல் வெட்டுகள் மற்றும் கட்சி கொடிகள், கொடிக்கம்பங்கள் அகற்றி வருகின்றனர். தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.