1993 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜான் பாண்டியனை, தென்காசி தொகுதி எம்.பி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று காளிங்கராயர் குடும்பத்தின் சார்பாக சித்தார்த் காளிங்கராயர் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற காளிங்கராயர் குடும்பத்தை சேர்ந்தவர் சித்தார்த் காளிங்கராயர். தங்களுடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவரை நடு ரோட்டில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜான் பாண்டியனை தென்காசி தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று காலை 10.30 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி. ரோட்டில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து காரில் திரும்பிய பொழுது, எங்கள் குடும்பத்தை சேர்ந்த விவேக் காளிங்கராயர் என்பவரை கூலிப்படையினர் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி மற்றும் வி.எல்.பி. பொறியியல் கல்லூரியின் தாளாளர் வெங்கடராம கிருஷ்ணன், மற்றும் கூலிப்படைத் தலைவன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில், 2003 ஆம் ஆண்டு, ஜனவரி 6 ஆம் தேதி, கோவை முதலாவது விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், வெங்கடராம கிருஷ்ணன், கூலிப்படை தலைவன், ஜான் பாண்டியன் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய, டிரைவர் சுப்பிரமணியம் என்பவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஒரு கொலை குற்றவாளியின் கட்சியுடன் கூட்டணி என்பதே கண்டனத்துக்குரியதாக பார்க்கப்படும் போது, இன்னும் ஒரு படி மேலே போய் அந்த கொலை குற்றவாளியை ஒரு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக பாஜக போன்ற ஒரு கட்சி நியமிப்பது எங்களுக்கு மன உளைச்சலை தரும் விஷயமாகவே இருக்கிறது.
அதுவும், மோடி போன்ற ஒரு பெரிய தலைவரின் தலைமையிலான பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏமாற்றத்தையும், பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது", என்றார்.
பாஜகவின் இந்த முடிவிற்கு தீவிரமாக கண்டனங்களை தெரிவித்த சித்தார்த் காளிங்கராயர், அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர்களது நடத்தை மற்றும் குற்றப் பின்னணிகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.