கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார்(31) என்ற நபர், தனது நண்பர்களுடன், வெள்ளியங்கிரி மலையில் இருந்து கீழே இறங்கும் போது, 7வது மலையில் இருந்து கீழே விழுந்ததில், காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கோவை: தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டியில் அமைந்துள்ள வெள்ளிங்கிரி வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
இன்று, சித்ரா பௌர்ணமி என்பதால் கடந்த இரு நாட்களாக, வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கடந்த 18-ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து கீழே விழுந்து விட்டார்.
இதில், அவரது வயிறு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அவரது நண்பர்கள், அவரை உடனே மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சுமை தூக்கும் பணியாளர்கள் காயமடைந்த வீரக்குமாரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் அங்க தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக , கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தற்போது, உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மூச்சுத் திணறல், இருதய கோளாறு போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலையில் இருந்து கீழே தவறி விழுந்து காயமடைந்து ஒருவர் உயிரிழந்திருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.