வீடு கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சாமிநாதன் பரிந்துரை செய்தும் மின் இணைப்பு வழங்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூர் ஊராட்சியில் அரசு உதவியுடன் கட்டிக்கொடுக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் புகார் மனு வழங்கப்பட்டதாகவும், அதை அமைச்சர் படித்துப் பார்த்துவிட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார்.
அதன் பின்னரும் மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு வழங்குவதில் காலம்தாழ்த்தி வருவதாகவும், இதனால் வேதனை அடைந்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் குற்றச்சாட்டுகின்றார்.
காங்கேயம் அடுத்துள்ளது படியூர் ஊராட்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு பெரியார் நகர் என்ற மிகவும் பிற்படுத்தபட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கூலித்தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் திட்டமான (பிரதமர் வீடு வழங்கும் திட்டம்) வீடுகள் இல்லாத ஏழை எளியவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் படியூர் ஊராட்சி மன்றத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 வருடங்களாக வீடுகள் கட்டப்பட்டு அதற்கு மத்திய அரசானது ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
வீடுகள் கட்டும் பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று முறையாக மின் இணைப்பு வழங்கவேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் இருந்து வீடுகளை ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி மின் இணைப்பு வழங்குவதில்லை. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதனிடம் பொதுமக்கள் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதை படித்து பார்த்த அமைச்சர் சாமிநாதன் உடனடியாக இப்பகுதி பொதுமக்களுக்கு உரிய மின் இணைப்புகளை வழங்க பரிந்துரை செய்துள்ளார். அமைச்சர் பரிந்துரை செய்த மனுக்களை கொண்டு சென்று படியூர் மின் வாரியத்தில் வழங்கினாலும் அங்குள்ள அதிகாரிகள் பொதுமக்களை அலட்சியப்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அரசு இலவசமாக வழங்கிய நிலத்தில் இலவச பட்டா வாங்கி அதில் வீடு கட்டுவதற்கு அரசு வழங்கும் பணத்திற்கு விண்ணப்பித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தொகையும் கிடைத்துவிட்டது.
ஆனால், 3 மாத காலங்களாக மின் இணைப்பு பெறுவதற்கு மின்வாரியத்தில் மனுகொடுத்தும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. செய்தித்துறை அமைச்சர் பரிந்துரை செய்தும் அரசு அதிகாரிகளின் அலட்சியமாக இருந்து வருகின்றனர். மேலும் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என கூலி தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.