அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இப்பொருட்காட்சியானது தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று (மே.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும் வகையில் அரசுப்பொருட்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி, இந்த ஆண்டு வருகின்ற (25.05.2024) சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பிலும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இப்பொருட்காட்சியானது தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15/-ம், சிறியவர்களுக்கு ரூ.10/-ம், பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5/-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சத்துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார்பாடி இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.