கோவையில் இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் மீது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவர் மீதான இரண்டாவது வழக்கு.
Coimbatore: கோவையில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் மீது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெரைட்டிஹால் ரோடு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன், சமூக வலைதள பக்கங்களை கண்காணித்தபோது, இந்து முன்னணி கோவை மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் என்பவரது பேஸ்புக் பக்கத்தில் கோயில் இடிப்பு தொடர்பாகவும், அரசை விமர்சிக்கும் விதமாக சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து ஜெயபாலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஜெய்சங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது ஜெய்சங்கர் மீது பதிவாகும் இரண்டாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி, நபிகள் நாயகத்தை அவதூறு செய்ததாக சிங்காநல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர்.
ஹிந்து முன்னணி தலைவர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பிப்ரவரி 1 ஆம் தேதி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஜெய்சங்கர் பேசியபோது, நபிகள் நாயகத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி, ஜெய்சங்கரை கைது செய்யக்கோரி காவல்துறையிடம் மனு அளித்தன. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.