கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2024-ன் 3ம் சுற்று ஜூலை 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது. 8 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
கோவை: கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2024-ன் 3ம் சுற்று - ராலி ஆப் கோயம்புத்தூர் வரும் சனி, ஞாயிறு என இரு நாட்கள் கார் துறை சார்ந்த விளையாட்டு பிரியர்களுக்கு விருந்தாக நடைபெறவுள்ளது. இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு 2022-26 ஆண்டுகாலம் வரை கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ ப்ரோமோட்டராக உள்ளது.
இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று நாசிக்கிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோவையில் 3ம் சுற்று ஜூலை 27 (சனி) மற்றும் ஜூலை 28 (ஞாயிறு) நடைபெறுகிறது. இதன் துவக்க விழா, வெள்ளி (26.7.2024) கோவை ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் கோவை மாநகர காவல் துறைஆணையர், V. பாலகிருஷ்ணன் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவுரவ விருந்தினர், எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் R. சுந்தர், கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள், போட்டியாளர்கள், ஓட்டுனர்கள், மற்றும் புளூ பேண்ட் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைப்பார்.
இந்த 2-நாள் கார் ராலியில் மொத்தம் 8 ஐ.என்.ஆர்.சி. (INRC) போட்டி பிரிவுகள் உள்ளன: ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி. 2., ஐ.என்.ஆர்.சி. 3., ஜூனியர் ஐ.என்.ஆர்.சி., ஐ.என்.ஆர்.சி-பெண்கள் பிரிவு, ஜிப்சி பிரிவு, கிளாசிக் கார் பிரிவு மற்றும் SUV கார் பிரிவுகள். இந்த 8 பிரிவுகளில் போட்டி இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. மொத்தம் 8 சுற்றுக்கள் (Stages) இதில் இடம் பெறும். இந்த ராலியில் மொத்தம் 269.38 கிலோ மீட்டர் தொலைவு உள்ளடங்கும்.
முதல் நாள் நிகழ்வுகளுக்கான போட்டிகள் L&T சாலை அருகே உள்ள SM அக்ரோ வளாகத்திலும் இரண்டாம் நாளுக்கான போட்டிகள் கோவையை அடுத்த கேத்தனூர் பகுதியிலும் நடக்கிறது. முதல் நாள் போட்டிகள் காலை 8.30 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் 1-6 சுற்றுகள் நடைபெறும். வெற்றி பெறும் வீரர்களுக்கு ரூ.9.35 லட்சம் அளவிலான பரிசு தொகையை அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்ச்சி நடுப்பாளையம் பிரிவில் உள்ள ஜெயம் மஹாலில் நடைபெறும். கோவையில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியை பொதுமக்கள் இலவசமாக நேரில் பார்த்து ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ராலியின் முடிவுகளை https://live.chronopulse.com/ என்ற இணையத்தளத்தில் போட்டியின் ஒவ்வொரு நாள் முடிவிலும் பார்க்க முடியும். புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 4 ஆம் சுற்று ஹைதராபாத்தில் அக்டோபர் மாதத்தில், 5 ஆம் சுற்று குடகில் நவம்பரிலும், 6 ஆம் சுற்று பெங்களூரில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.