பொள்ளாச்சி அருகே காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதால் அணைக்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள காளியப்பாகவுண்டன்புதூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட தரைமட்ட பாலம் ஆற்றில் மூழ்கியது.
இதனால் அப்பகுதியில் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செல்ஃபி மோகத்தால் பொதுமக்கள் பலர் ஆற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை உணராமல் புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.