பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவற்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பணியின் போது ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய பதவி உயர்வு பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலைஞரின் கனவு இல்லத் திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் மற்றும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு, அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு வருவதால், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.