திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியத்தில் ஈரோடு எம்.பி. கே.இ. பிரகாஷ் 31 கிராமங்களில் நன்றி அறிவிப்பு பயணம் மேற்கொண்டார். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், வரும் தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றார்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியப் பகுதியில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் நேற்று நன்றி அறிவிப்பு பயணத்தை மேற்கொண்டார். காலை 8 மணியளவில் வரப்பாளையம் பகுதியில் அவருக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல குழுத் தலைவருமான இல. பத்மநாபன் தலைமையில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவரும் திமுக ஒன்றியச் செயலாளருமான எஸ்.வி. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மேலும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தனது உரையில், "நமது ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தருவார். அதேபோல் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்துப் பொதுமக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவார்," என்று தெரிவித்தார்.
எம்.பி. கே.இ. பிரகாஷ் தனது உரையில், "தேர்தலின்போது ஓட்டு கேட்பதற்காக வந்தபோது எவ்வளவு உற்சாகமாக எனக்கு வரவேற்பு அளித்து வாக்களித்தீர்களோ, அதேபோல் நன்றி தெரிவிக்க வரும்போதும் அதே உற்சாகத்துடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட தற்போது 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். இதேபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் குறைந்தபட்சம் தாராபுரம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
வரப்பாளையம், குப்பிச்சிபாளையம், வீராச்சிமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில் நன்றி அறிவிப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் ஏராளமான பொதுமக்களும், திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, திமுக முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.