கோவையில் ஆகஸ்ட் 27 முதல் 31 வரை மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் 5 நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்வேறு அரசு திட்டங்கள், விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நிகழ்வில் கண்காட்சி, கருத்தரங்கு, போட்டிகள் இடம்பெறுகின்றன.
கோவை: இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக மக்கள் நலத்திட்டங்கள் குறித்து ஐந்து நாட்கள் (ஆகஸ்ட் 27 - ஆகஸ்ட் 31) விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற உள்ளது.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் கல்வி, குழந்தை திருமண தடுப்பு, டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, தேசிய விண்வெளி தினம் ஆகியவை குறித்து நடைபெற உள்ள இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாபெரும் கண்காட்சி, கலை நிகழ்ச்சி, கருத்தரங்கு, பல்வேறு போட்டிகள், அரசு துறைகளின் அரங்குகள் ஆகியவை இடம்பெற உள்ளன.
சென்னை, மத்திய மக்கள் தொடர்பகம் & பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை கூறுகையில், "இந்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக தமிழகம் எங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் நாளை தொடங்கி ஐந்து நாட்களுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. மத்திய அரசினுடைய அனைத்து துறைகளிலிருந்தும் உயர் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டு அந்தந்த துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல இருக்கிறார்கள்" என்றார்.
"நாளை நடைபெறவிருக்கும் துவக்க விழா நிகழ்ச்சியில், கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டத்தின் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களை கவரும் வகையில் தேசிய விண்வெளி தினம் பற்றிய விளக்க படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த விளக்கங்கள் இதில் இடம்பெற உள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் மக்களிடம் இந்த திட்டங்கள் சென்று சேரவில்லை. அதனால் அரசிடம் திட்டங்கள் இருந்தாலும் மக்கள் பயன்பெறுவது குறைவாகவே இருக்கிறது என்ற காரணத்தால் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்," என விளக்கினார்.
"எஸ் மேட்டுப்பாளையம், சூலூர், காமாட்சிபுரம், சீரபாளையம், வழுக்குப்பாறை, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய பகுதிகளிலும் நேரடியாக சென்று மாலை நேரங்களில் எங்களது துறை சார்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்கள்," என்று அவர் கூறினார்.
அண்ணாதுரை மேலும் தெரிவிக்கையில், "12 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஐந்து நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை சார்ந்த செய்திகளை கையேடுகளாக அச்சடித்து விநியோகப்படுத்த உள்ளோம். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆதார் திருத்தங்கள் உள்ளிட்டவைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மேற்படிப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகளை எடுத்துரைக்க உள்ளோம். பெண் குழந்தைகளுக்கு, சுய பாதுகாப்புக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் நாளொன்றுக்கு 500 பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.