திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் கிருஷ்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில் பாஞ்சராத்ரா ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த நிகழ்வில், வேங்கடேசப் பெருமாள், ஆண்டாள், பத்மாவதி தாயார், லட்சுமிஹயக்ரிவர், சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் மற்றும் கிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பத்மாவதி மண்டபத்தில் நாராயணீயம் பாராயணமும் நடத்தப்பட்டது. பக்தர்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த ராதை மற்றும் கிருஷ்ணன் கொலு பொம்மைகளை வைத்து திருக்கல்யாணம், சங்கு பால் வைபவம், வெண்ணை காப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன.
பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கிருஷ்ணருடன் பல்லக்கில் எழுந்தருளி கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கண்ணன் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகம் கொண்டாடினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.