கோவையில் 2014ல் தொடரப்பட்ட வழக்கில் இருந்து திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். சாட்சிகள் நிரூபிக்கப்படாததால் கோவை நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.
கோவை: கோவை ஜே எம் எண் 1 நீதிமன்றம் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் உள்ளிட்ட 7 பேரை பத்தாண்டுகால வழக்கிலிருந்து விடுவித்துள்ளது. இந்த வழக்கு 2014ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்டது.
2014ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்ற புத்தகத்தை நா.கார்த்திக் பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது, அங்கிருந்த அதிமுக கொடி கம்பம், பெயர்ப்பலகையை அடித்து உடைத்து அதிமுக நிர்வாகிகளை தாக்கியதாக நா.கார்த்திக், மணிகண்டன், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பத்தாண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், சாட்சிகள் நிரூபிக்கப்படாத காரணத்தால் அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் நா.கார்த்திக்குக்கு திமுகவினர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய நா.கார்த்திக், "பழிவாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டது. திமுகவின் செயல்பாடுகளை அடக்குவதற்காக அதிமுகவினர் திட்டமிட்டு பொய் வழக்கு போட்டிருப்பது நிரூபணமாகி இருக்கிறது. பத்து ஆண்டுகளாக பொய் வழக்கிற்காக நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கியது வேதனையாக இருக்கிறது," என்று தெரிவித்தார்.