மஹாளய அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கூடி, பவானி ஆற்றில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தி வழிபாடு நடத்தினர்.
கோவை: மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்த திரண்டனர்.
அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பவானி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். பவானி நதி மாதேஸ்வரன் மலைக்கோவில் அருகே அமைந்துள்ள இந்த நந்தவனம் காசிக்கு நிகராக கருதப்படுகிறது.
இங்கு தர்ப்பணம் செலுத்தினால் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும் மற்றும் குடும்பம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மஹாளய அமாவாசை அன்று பொதுமக்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் காய்கறிகள், பழங்கள், பிண்டங்கள் வைத்து அர்ச்சகர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவற்றை பவானி ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவன நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆண்டும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில் கூடி, தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.