இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இருவர் குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செய்தித்தொடர்பாளரான சசிக்குமார் சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி காவல்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏராளமானோரை நேரடியாக விசாரித்ததோடு, சம்மன் அனுப்பி அலுவலகத்திற்கு வரவழைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை கே.கே.புதூர் பகுதியை சேர்ந்த முபாரக் மற்றும் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் ஆகியோரை நேரில் ஆஜாராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால் இருவரும் கடந்த 23 ம் தேதி முதல் மாயமாகியிருந்ததும் அவர்களது குடும்பத்தினருக்கும் சரியான தகவல் அளிக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரது புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள சிபிசிஐடி போலீசார், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் போலீசாருக்கு தெரிவிக்குமாறும் சிபிசிஐடி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். சசிக்குமார் கொலை செய்யப்பட்டு 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.