ஏ டி எம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணமில்லாத ஏ டி எம் மையங்களில் பணத்தை நிரப்ப வலியுறுத்தி கடந்த சனியன்று சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பள்ளிக்கரனை காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாணவர் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், துணிந்து நின்று போரிடுவோம் என்கிற ஆவேச முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.