பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. சங்கத் தலைவர் ஆர். அருண் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மின்சாரக் கட்டணம், பருத்தி உற்பத்தி மேம்பாடு, மூலதன மானியம், புலம்பெயர் தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைச்சர் வி. சம்பத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கௌரவிக்கப்பட்டார்.


Coimbatore: பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.



தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். அருண் கார்த்திக் தலைமை வகித்தார். கௌரவச் செயலாளர் எஸ். ஜெகதீஷ் சந்திரன், 2025–26 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில், நூற்புத் தொழில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரிக்கு அக்டோபர் 31, 2026 வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

2026ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படாததற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த சிஸ்பா, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் நிலையான மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தொடரவும், Maximum Demand Charges-ஐ குறைக்கவும் கோரிக்கை விடுத்தது.

தமிழகத்தில் தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க மேம்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு வழங்குதல், உற்பத்தி மற்றும் மகசூலை அதிகரித்தல், வெளிப்படையான பருத்தி ஏல மையங்கள் மற்றும் சிறந்த சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.



நூற்பாலைகளின் இயந்திர நவீனமயமாக்கல், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மின்சாரச் சேமிப்பு முதலீடுகளுக்கு 25 சதவீத மூலதன மானியம் வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், நூற்பாலைகளில் பணிபுரியும் தகுதியுடைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும், அவர்கள் பணிபுரியும் பகுதிகளில் நியாய விலைக் கடைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களின் பயன்களைப் பெறவும் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

செயற்கை இழைகள் போதுமான அளவில் தடையின்றி போட்டித்தன்மை வாய்ந்த விலையில் கிடைக்க மத்திய அரசு நிலையான தொழில்துறைக்கு உகந்த கொள்கையை வகுக்க வேண்டும் என்றும், மதிப்புக்கூட்டப்பட்ட நூல் மற்றும் துணி உற்பத்திக்கான தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சிஸ்பா கோரியது.

தமிழகத்தின் முக்கிய பருத்தி நுகர்வு மையங்களில் இந்திய பருத்திக் கழகத்தின் (CCI) கிடங்குகளை அமைக்கவும், CCI மூலம் கொள்முதல் செய்யப்படும் பருத்தியை எடுத்துச் செல்வதற்கான 30 நாள் காலக்கெடுவை 90 நாட்களாக நீட்டிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விழாவில் சிஸ்பா 35வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சைமா தலைவர் மற்றும் பல்லவா குழும நிர்வாக இயக்குநர் துரை பழனிசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி. சம்பத் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிஸ்பா சார்பில் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது. சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்களித்த முன்னாள் தலைவர்கள் ஆர். சின்னியன் மற்றும் ஆர். குப்புசாமி ஆகியோருக்கு அமைச்சரின் முன்னிலையில் “Visionaries of SISPA Award” வழங்கப்பட்டது.

தொழில்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அமைச்சர் வி. சம்பத் குமாரிடம் சிஸ்பா சார்பில் வழங்கப்பட்டது.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...