இந்தியாவுக்கு எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கும் ஆசை இல்லை - பிரதமர் மோடி

டெல்லி: இந்தியா எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமித்தது இல்லை; ஆக்கிரமிக்கும் ஆசையும் இல்லை என்று என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவு தலைமையகத்திலுள்ள முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போர் சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையத்துக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தின் திறப்பு விழாவில் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட மோடி பேசுகையில், "இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் வலியச் சென்று முதல் தாக்குதல் தொடுத்ததில்லை. பிற நாடுகளின் நிலத்தின் மீது இந்தியாவுக்கு ஆசை இருந்ததுமில்லை. ஆனால், அதேநேரத்தில் 2 உலகப் போர்களில், 1.5 லட்சம் இந்திய வீரர்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். இந்த 2 உலகப் போர்களில், இந்தியாவுக்கு நேரடித் தொடர்பில்லை என்ற போதிலும், பிற நாடுகளுக்காக இந்திய வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

2 உலகப் போர்களிலும் மிகப்பெரிய விலையை இந்தியா கொடுத்த போதிலும், தனது தியாகத்தின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணரும்படி இந்தியா செய்ததில்லை. இதை உணர்த்தவே, எப்போதெல்லாம் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறேனோ, அப்போதெல்லாம் அங்கிருக்கும் இந்திய வீரர்களின் போர் நினைவிடத்தில் நான் அஞ்சலி செலுத்தி வருகிறேன்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு, அந்நாட்டு அரசியலில் தலையிட வேண்டும் என்பதிலோ அல்லது அந்த நாடுகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதிலோ நம்பிக்கை கிடையாது. அந்நாடுகளில் பிற சமூக மக்களோடு ஒன்றோடு ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், தண்ணீர் போன்றவர்கள். தேவைக்கேற்ப தங்களது நிறத்தையும், தோற்றத்தையும் அவர்கள் மாற்றிக் கொள்வார்கள்.

நேபாள நாட்டில் பூகம்பம் தாக்கியபோது அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்தது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருக்கும் யேமனில் சிக்கியிருந்த இந்தியர்கள், பிற வெளிநாட்டவர்களை மீட்கும் பணியிலும் வெளியுறவுத் துறை அமைச்சகம் சிறப்பாக ஈடுபட்டது.

மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்யும் நாடுகளில் இந்தியாவும் தன்னைத் தானே தற்போது சேர்த்துக் கொண்டுள்ளது. அதில் முக்கிய பங்களிப்பாளராகவும் திகழ்கிறது. இதனால் பிரச்னைக்குரிய இடத்தில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்கு இந்தியாவின் உதவியை பிற நாடுகளும் தற்போது கேட்கத் தொடங்கி விட்டன," என்றார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...