பிரதமர் மோடிக்கு மம்தா, கெஜ்ரிவால் 3 நாள் கெடு

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப்பெற பிரதமர் மோடிக்கு மம்தாவும், கெஜ்ரிவாலும் 3 நாள் ‘கெடு’ விதித்தனர். திரும்பப்பெற தவறினால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப்பெற பிரதமரை வலியுறுத்தக்கோரி, ஜனாதிபதி பிரணாப்் முகர்ஜியிடம் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்றுமுன்தினம் கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து, நேற்று அவர் இப்பிரச்சினைக்காக டெல்லியில் ஆசாத்பூர் மொத்தவிலை பழம் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவருடன் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

இந்த போராட்டம் நாட்டை காக்க நடக்கும் போராட்டம். ஏழை மக்களுக்கான போராட்டம். ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், சாமானியர்கள் பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளனர். அனைத்து வர்த்தகங்களும் முடங்கி விட்டன. நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளப்பட்டு விட்டது. நெருக்கடி நிலை காலத்தில் கூட இப்படி நடந்தது இல்லை.
நல்ல நாட்கள் வரும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால், இவையெல்லாம் நல்ல நாட்கள் வருவதற்கான அறிகுறியா? அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பதால், மண்ணின் மணத்தை மறந்து விட்டார், பிரதமர் மோடி. அரசியல் சட்ட பிரிவுகள் மீறப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணத்தை மீட்டீர்கள் என்று சொல்ல முடியுமா?

இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று மற்ற எதிர்க்கட்சிகள் கேட்பது தேவையற்றது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட இதுபோன்ற குழுக்களால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையே ரொக்க பயன்பாடுதான். மக்களிடம் ரொக்கம் சென்றடையாவிட்டால், உணவு பிரச்சினை ஏற்படும். ஆனால் இதை அறியாமல், கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துமாறு அரசு சொல்கிறது. நாட்டில் 4 சதவீத மக்களே அவற்றை பயன்படுத்துகிறார்கள் என்பது அரசுக்கு தெரியாதா?

இந்த அரசு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிவு எடுக்கிறது. முதலில், ஒரு நாளைக்கு ரூ.4,500 நோட்டுகளை மாற்றலாம் என்றனர். இப்போது, ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும் என்கின்றனர்.

பணம் மாற்ற வருபவர்களுக்கு விரலில் அழியாத மை வைக்கப்படும் என்கின்றனர். நீங்கள் நேர்மையானவர்கள், நாங்கள் மட்டும் திருடர்களா?

நாங்கள் எப்போதுமே போராளிகள். யாரை பார்த்தும் பயப்பட மாட்டோம். மக்களுக்கான எங்கள் போராட்டத்தை தொடர்வோம். பிரதமர் மோடியின் சர்வாதிகாரத்துக்கு பணிய மாட்டோம்.

உங்களுக்கு துணிச்சல் இருந்தால், என்னை ஜெயிலில் தள்ளுங்கள், துப்பாக்கியால் சுடுங்கள். துப்பாக்கி குண்டுகளை சந்திப்பதற்கும் தயாராகவே இருக்கிறோம்.

ஆர்ப்பாட்டத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

கருப்பு பணம் மீண்டும் வெள்ளமென பாய்ந்து வருகிறது. செல்வாக்கு உள்ளவர்கள், வங்கிகளுக்கு 40 சதவீத கமிஷன் கொடுத்து, கருப்பு பணத்தை மாற்றி வருகிறார்கள். சாமானியர்களே வரிசையில் நிற்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இது மிகப்பெரிய ஊழல்.

மக்களை வங்கியில் பணம் செலுத்த கட்டாயப்படுத்துவதன் மூலம், ரூ.10 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயத்தில், மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் வாங்கிய ரூ.8 லட்சம் கோடி கடனை ரத்து செய்ய நினைத்துள்ளது.

விஜய் மல்லையாவை ஒரே இரவில் லண்டனுக்கு அனுப்பி வைத்து விட்டது. ஆனால், மக்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டது. பா.ஜனதா முன்னாள் மந்திரி ஜனார்த்தன் ரெட்டி, ரூ.500 கோடி செலவழித்து, தன் மகள் திருமணத்தை நடத்துகிறார். அவர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தாதது ஏன்?

ஆனால், சாமானியர்கள் வீட்டு திருமணத்துக்கு ரூ.2½ லட்சம் போதும் என்று அரசு சொல்கிறது. அருண் ஜெட்லி, தன் மகள் திருமணத்துக்கு ரூ.2½ லட்சம்தான் செலவழித்தாரா?

பணத்தை மாற்ற வரிசையில் நிற்பது தேசபக்தி என்று கூறி, மக்களை முட்டாளாக்கி வருகிறார், மோடி. அப்படி வரிசையில் நின்று 40 பேர் பலியானதற்கு யார் பொறுப்பு?

நாட்டில் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த முடிவை 3 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான பின்விளைவுகள் ஏற்படும். நாடுதழுவிய போராட்டம் வெடிக்கும்.

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...