குறித்த நேரத்துக்கு அரசு பேருந்துகள் வருவதில்லை என குற்றம்சாட்டி நல்லூர்பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை சூலூரை அடுத்த நல்லூர்பாளையம் கிராமத்தில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்கு வழித்தடம் எண் 6 மற்றும் வழித்தடம் எண் 105 ஆகிய இரண்டு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், இரண்டு பேருந்துகளும் குறித்த நேரத்துக்கு இயக்கப்படாததால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர்.
தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால், இன்று காலை திடீரென நல்லூர்பாளையம் பகுதியில் பேருந்துகளை சிறை பிடித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கு செல்வதற்கு எட்டு மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரம் தாமதமாகவும், மாலையில் 4:00 மணிக்கு வரவேண்டிய பேருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாமதமாக வருவதும் சில சமயங்களில் பேருந்துகள் வருவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
அன்றாட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என பொதுமக்கள் அறிவித்துள்ள நிலையில், சூலூர் கோட்ட அதிகாரிகள் மற்றும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.