கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏராளமான போலீசார்கள் வரவழைக்கபட்டு பேச்சுவார்த்தைக்கு பின்னரே நீரோடை அகலப்படுத்தும் பணியானது நடைபெற்றது.
கூடலூர் அருகே உள்ள நாடுகாணி பகுதியில் உள்ள நீரோடை ஆக்கிரமிக்கபட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து குடியிருப்புகளில் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் திண்டாடுவது வழக்கமாக உள்ளது.
இதனை சரி செய்ய அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோடையை அகலப்படுத்தும் முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.
அதற்கான பணிகளை தொடங்கி மாவட்ட நிர்வாகம் நில அளவையில் செயல்பட்ட போது நீரோடையை ஒட்டி உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதி முழுக்க பெரும் பரபரப்பு நீடித்தது.
இச்சம்பவத்தை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நீரோடையை அகலப்படுத்தும் பணியை தற்காலிகமாக நிறுத்தியது.
பின்னர் இதனை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் வரவழைக்கபட்டதுடன் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் நீரோடை பகுதியில் புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நில அளவை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆற்றின் இரு புறங்களிலும் நீரோடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகலப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.