உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் ஆண்டு வருமானம் 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வருமான வரி வரம்பை அதற்கு இணையாக உயர்த்த கோரி த.பெ.தி.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
கோவை:பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டின்படி, உயர்சாதி ஏழைகளுக்கான ஆண்டு வருமானமாக 8 லட்சம் ரூபாயை அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளிக்காத அமைப்புகள், இந்தியாவில் வருமான வரி வரம்பு வருடத்திற்கு 5 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் கூறியது எவ்வாறு நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்தியாவில் வருமான வரி வரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரியும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வருமான வரி அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வருமான வரி உச்சவரம்பை 8 லட்சமாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி,முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.