ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 4 பேரை கைது செய்த அதிகாரிகள், 6.5 கோடி ரூபாய் மதப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் மறைத்து கொண்டு வரப்படும் தங்க கட்டிகள் சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் அண்மை காலமாக அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலூரை சேர்ந்த சங்கர், பரமகுடியை சேர்ந்த ராம்பிரபு, மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய நான்கு பேரும் தாங்கள் அணிந்திருந்த உடைகளில் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்ததது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடமிருந்த 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.