கோவையில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளுக்கு ஊர்வலமாக சென்ற இரண்டு அமைப்பை சேர்ந்தவர்கள், சாலையில் தாறுமாறாக வாகன ஓட்டிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை: விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டது. அவரது உருவ சிலைக்கு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஒரு பகுதியாக, கோவை ஈச்சனாரியில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தமிழ்நாடு நாயக்கர் முன்னேற்ற கழகம், அகில பாரத யாதவ மகா சபாவை சேர்ந்த நிர்வாகிகள், 200 க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது, கோவை பொள்ளாச்சி சாலையில் சுந்தராபுரம் அருகே செல்லும்போது, சத்தமாக கத்தியபடியும், வாகனங்களை தாறுமாறாக ஓட்டியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியபடி சென்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.