உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி தொடர்ந்து சீல் வைத்து வரும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து வியாபாரிகள் சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நீலகிரி: உதகையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நகராட்சி கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடக்கடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதனால் பெரும்பாலான கடைகளுக்கு 90 சதவீத வாடகை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத வாடகையை மார்ச் மாதம் இறுதிக்குள் செலுத்த வியாபாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.
அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் குறைந்தபட்ச வாடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.
குறிப்பாக நேற்று ஒரே இரவில் 30 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சீல் வைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே புதிய வாடகை முறையைத் தவணை முறையில் செலுத்தி வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறிய வியாபாரிகள், நகராட்சி சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.