தாராபுரம் அருகே அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பாலசுப்ரமணியம் நகரிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்குழாய் மூலம் நீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து, சபரி அய்யப்பன் நகர் குடியிருப்பு சங்க செயலாளர் சுப்பிரமணி, மின் இணைப்பை துண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு நீர் எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் பாலசுப்ரமணியம் நகர் மற்றும் சபரி அய்யப்பன் நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இந்நிலையில், பாலசுப்பிரமணியம் நகரில் 130க்கும் மேற்பட்ட அருந்ததியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இவர்களின் உபயோகத்திற்காக கவுண்டச்சிபுதூர் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் சபரி ஐயப்பன் நகர் பகுதியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு, 930 அடி ஆழத்தில் இருந்து, ஆழ்குழாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரப்பும் பணிக்காக குழாய் அமைக்கும் பணியில் ஊராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சபரி ஐயப்பன் நகர் பகுதியைச் சார்ந்த குடியிருப்பு வாசிகளின் சார்பில் அந்நகரின் குடியிருப்போர் நலச்சங்க செயலாளராக, முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவர் இருந்து வருகிறார்.
இதனிடையே அவர், தங்கள் பகுதியில் இதேபோல் புதிய மேல்நிலைத் தொட்டி ஒன்றைக் கட்டி ஆழ்குழாய் கிணறு தண்ணீர் இணைப்பு கொடுத்துவிட்டு பாலசுப்ரமணியம் நகருக்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும் இல்லை என்றால் அங்கு தண்ணீர் செல்ல விட மாட்டோம் எனக் கூறி மின் இணைப்புகளை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளான பாலசுப்பிரமணியம் நகர், அருந்ததியர் மக்கள் சபரி ஐயப்பன் நகர் பகுதிக்கு வந்து அரசு வழங்கிய திட்டத்தை தடுத்து நிறுத்தி குடிநீர் விநியோகத்தை தடுப்பதற்கும் மின் இணைப்பை துண்டிப்பதற்கும் அதிகாரம் கொடுத்தது யார் எனக்கூறி சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக பாலசுப்ரமணியம் நகர் மற்றும் சபரி ஐயப்பன் நகர் பகுதியில் குடியிருக்கும் இருவேறு பிரிவினருக்கிடையே மோதல்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து குடிநீர் மற்றும் மின் இணைப்பை துண்டிக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது ஒரு முன்னாள் ராணுவ வீரரே இந்த செயலை செய்யலாமா எனக் கூறி முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியத்தை தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலசுப்ரமணியம் நகர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாராபுரம் காவல் நிலையத்தின் முன் திரண்டு குடிநீர் இணைப்பையும் மின் இணைப்பையும் தடை செய்த நபர் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறி காவல் நிலையத்தின் முன் திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர். விசாரணை நடந்து வருவதால் இடையூறு செய்ய வேண்டாம் என முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.
இருப்பினும் காவல் நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரண்டு நின்றிருந்ததால், பரபரப்பான சூழல் நிலவியது.