கோவையில் ஆலாந்துறை காமாட்சி அம்மன் திருக்கோவில் 96ஆம் ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பெண் பக்தர்கள் பறவை அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவை: கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இங்கு 96 ஆம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்தத் திருவிழாவை வான வேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க மிகப் பிரம்மாண்டமாக 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தினர் கொண்டாடினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய கோவில் திருவிழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
கோமாரி பூஜை செய்யப்பட்டு இரவு சத்தி கரகம் எடுத்து அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் 501 பக்தர்கள் பூவோடு எடுத்தனர். மேலும், பறவை வாகனத்தில் அலகு குத்துதல், ஆணி கால் செருப்பு, பால்குடங்கள் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, நடைபெற்ற வண்ணமிகு வான வேடிக்கை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதைத் தொடந்து மாவிளக்கு வழிபாடு, முளைப்பாரி எடுப்பும், இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.