மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருப்பதாக திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.
கோவை: தமிழர் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் வாங்குவது குறித்து ஹிப் ஹாப் ஆதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என தெரிவித்தார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியும் முனைவர் பட்டம் பெறுகிறார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தாகவும், இப்போது அது நிறைவுற்று இருப்பதாகவும் கூறினார்.
முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். வேறு வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்ததாகவும், அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய படம் வரும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என பதிலளித்தார்.
மேலும் சந்திராயன் 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கின்றது என்றும் கூறினார். மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருக்கிறது என கூறிய அவர், அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.