பல்லடத்தை அடுத்த குன்னாங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் - பிரதீபா தம்பதியின் ஒன்றரை வயது மகன் சாய் மகிழன் விலங்குகள், பறவைகள், தேசிய சின்னங்களின் பெயர்களை சொன்னால் அதனை கண்டுபிடிக்கும் ஆற்றல் மூலம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
திருப்பூர்: பல்லடம் அருகே அபார ஆற்றலால் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒன்றரை வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 0
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குன்னாங்கல் பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி பிரதீபா. இவர்களுக்கு சாய் மகிழன் மற்றும் விசாக மித்திரன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் சாய் மகிழன் பிறந்த எட்டாவது மாதத்தில் இருந்து வன விலங்குகள், செல்லப் பிராணிகள், பறவைகள், வாகனங்கள், வடிவங்கள், நமது தேசிய சின்னங்கள் ஆகிய புகைப்படங்களை காட்டி அதன் பெயர்களையும் சொல்வதற்கு அவரது தாய் பயிற்சி அளித்துள்ளார்.
ஒன்றரை வயதில் சிறுவன் சாய் மகிழனின் அறிவாற்றலை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற முன்னெடுப்பில் எட்டு வன விலங்குகள், எட்டு செல்லப்பிராணிகள், எட்டு பறவைகள், எட்டு பழங்கள், எட்டு காய்கறிகள், எட்டு வாகனங்கள், 18 வடிவங்கள், 8 உடல் உறுப்புகள், 7 தேசிய சின்னங்கள் ஆகியவற்றின் புகைப்படங்களின் பெயரை சொன்னாலே அந்த புகைப்படங்களை கண்டறியும் சாய் மகிழனின் அறிவாற்றலை காணொளியாக பதிவு செய்து Indian book of world records என்ற உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியுள்ளார்.
சிறுவன் சாய் மகிழனின் இந்த அறிவாற்றலை உலக சாதனையாக "இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்" அங்கீகரித்து அவருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளது.
தனது மகனுக்கு உள்ள அறிவாற்றலை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற முன்னெடுப்போடு இந்த காணொளி பதிவை உலக சாதனை நிகழ்விற்கு அனுப்பியதாகவும், தற்போது ஒவ்வொரு புகைப்படத்தின் பெயர்களையும் தெளிவாக சொல்லும் அளவிற்கு சாய் மகிழன் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் அவரது தாய் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
ஒன்றரை வயதில் உலக சாதனை புத்தகத்தில் சிறுவன் சாய் மகிழன் இடம்பெற்றது பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.