பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக 12 திமுக கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
21 வார்டுகள் கொண்ட கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரூராட்சியில் ஒப்பந்தம் மற்றும் டெண்டர் முறைகேடுகள், வரவு செலவு கணக்குகளை சரியாக சமர்ப்பிக்காதது போன்ற பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.
கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய கவுன்சிலர்கள், திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களே தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.