விநாயகர் சதுர்த்தி நெருங்கும் நிலையில், கோவையில் 5 இன்ச் முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் நட்பு பொருட்களால் தயாரிக்கப்படும் இந்த சிலைகள் பலவகை வடிவங்களில் கிடைக்கின்றன.
கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சிலை தயாரிப்பாளர்கள் வேகமாக பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்பதால், 5 இன்ச் முதல் 10 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் களிமண் மற்றும் காகிதக்கூழ் உள்ளிட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மச்ச விநாயகர், சிம்ம விநாயகர், பஞ்சமுக ஆஞ்சநேயருடன் கூடிய விநாயகர், Bike விநாயகர், கங்காருவுடன் கூடிய விநாயகர் என பல்வேறு வகையான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தயாரிக்கப்பட்ட சிலைகளுக்கு டிஸ்டெம்பர் பெயிண்ட் கொண்டு வர்ணப்பூச்சு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மிகவும் ஆர்வத்துடன் விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.