கோவையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.96.47 கோடி கடன் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி பேசினார். முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும், மகளிர் குழுக்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர் விளக்கினார்.
கோவை: கோவையில் நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள 1,727 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.96.47 கோடி கடன்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, "கோவை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு ரூ.96.47 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஒருங்கிணைத்து பணியாற்றிய ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், "மகளிர் சுயஉதவிக் குழு கலைஞர் கொண்டு வந்த மகத்தான திட்டம். தற்போதைய முதல்வர் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சுயஉதவிக் குழுக்களை பொருத்தவரை முதல்வர் தனி கவனம் செலுத்துகிறார்," என்று குறிப்பிட்டார்.
முதல்வரின் அமெரிக்கப் பயணம் குறித்தும் அமைச்சர் பேசினார். "அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் இதுவரை 11 நிறுவனங்களுடன் தமிழகத்தில் முதலீடு செய்ய ரூ.4,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,000-க்கும் மேற்பட்டோருக்கு நேரடியான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
மேலும், "வெளிமாநிலங்களில் இருந்து பார்ப்போருக்கு நமது திட்டங்கள் பெரிய திட்டங்களாக தெரிகிறது," என்று அமைச்சர் முத்துசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.