அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் உள்கட்சி பரபரப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது.


கோவை: 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் உள்கட்சி மோதல்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முக்கிய நிர்வாகிகள் கட்சித் தலைமை வழங்கிய பதவிகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கட்சிக்குள் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, கட்சித் தலைமையின் செயல்பாடுகள், தொண்டர்களின் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக செயல்பட்டனர். சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கட்சிக் கட்டளையை மீறி வாக்களித்ததாகக் கூறி, அவர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும் கட்சியில் இருந்து விலகிய நிலையில், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து எம்.எஸ்.எம்.ஆனந்தனும் கட்சியில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழலில், கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டிருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எனினும், எஸ்.பி.வேலுமணி கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும், அந்தப் பதவிக்கு பதிலாக பொள்ளாச்சி ஜெயராமன் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தனக்கு வழங்கப்பட்ட கட்சிப் பதவி தேவையில்லை என எஸ்.பி.வேலுமணி அண்மையில் பேசியதாக வெளியான வீடியோவும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்டோர், "நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாகவே தொடர்வோம். ஆனால், கட்சி வழங்கியுள்ள பதவிகளை ஏற்று செயல்பட இயலாத சூழ்நிலையை கட்சித் தலைமையே உருவாக்கியுள்ளது" என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புசார் சவால்களை எதிர்கொண்டு வரும் அதிமுகவில் உள்கட்சி குழப்பம் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...