தங்கத்திருக்குறளை வெள்ளிகளால் அலங்கரிக்கும் சுந்தரத் தெலுங்கர்!

உலகப்பொதுமறையாம் திருக்குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கியது என்பது உலகறிந்த ஒன்று. உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றி வணங்க வேண்டிய திருக்குறளை அரசு பேருந்துகளின் சன்னல் ஓரங்களிலும் பள்ளி புத்தகங்களிலும் மட்டுமே பார்க்க கூடிய சூழல் உருவாகிவிட்டது. ஆனால், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் திருக்குறளிலுள்ள முப்பாலின்பால் ஈர்க்கப்பட்டு இந்த கருத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என்று கூறி திருக்குறளை வெள்ளிகளால் செதுக்கி வருகிறார்.



தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் சூர்யவர்மன். கடந்த 2004ம் ஆண்டு தனது  குடும்பத்துடன் கோவை வந்த சூர்யவர்மன் ஆபரணங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து முறையாக தொழில் கற்றவர். இன்று கோவை பெரிய கடை வீதியில் சொந்தமாக நகை வேலைப்பாடுகள் செய்து வருகிறார். மோதிரங்கள், தங்க சங்கிலிகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொடுத்து அதை மேலும் மெருகூட்டும் பணி செய்து வந்த இவருக்கு திருக்குறள் மீதான ஆர்வமும் பக்தியும் அதிகரித்தது.

உலகமே கொண்டாடப்பட வேண்டிய திருக்குறளை தன்னால் முடிந்தவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய இவர், வெள்ளிகளை கொண்டு திருக்குறள் வரிகளை செதுக்க ஆரம்பித்தார். இதுவரை 110 திருக்குறள்களை வெள்ளியால் செதுக்கிய இவருக்கு தமிழ் மொழியை எழுதவோ அல்லது படிக்கவோ தெரியாது என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.



இது குறித்து சூர்யவர்மன் கூறியதாவது :-

9ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை வந்து இந்த தொழிலை கற்றுக் கொண்டேன். எப்போதும் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த சலிப்புத்தன்மை உண்டானது. இத்துறையில் சாதனைகள் பல படைக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் திருக்குறளை வெள்ளியில் செதுக்க முடிவு செய்தேன்.

வார்ப்பிலிருந்து எடுத்த வெள்ளி தகடுகளில் முதலில் திருக்குறளை எழுதினேன். அதில் எந்த ஒரு வார்த்தைப் பிழையும் இல்லை என்பதை தமிழ் படிக்கத் தெரிந்தவர்களை வைத்து உறுதிபடுத்திக்கொள்வேன். பின்னர், வெள்ளித் தகடுக்களில் இருக்கும் வார்த்தைகளை சிறுது சிறிதாக செதுக்கி இந்த வெள்ளித் திருக்குறளை உருவாக்கி வருகிறேன். இந்த வேலைகளை இயந்திரங்கள் உதவிகளின்றி முழுக்க முழுக்க கைகளால் தயாரித்து வருகிறேன்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு திருக்குறளை வெள்ளித்தகடுகளில் செதுக்கி முடிக்க 3 மணி நேரம் எடுத்துக் கொள்வேன். இந்த கடையில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை வெள்ளித் திருக்குறள் தயாரிக்க செலவிட்டு வருகிறேன். ஒரு எழுத்துக்கு 300 மில்லிகிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. சுமார், 30 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவு செய்து 110 திருக்குறள்களை தயார் செய்துள்ளேன். தொடர்ந்து, 1330 திருக்குறள்களையும் தயாரிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். வெள்ளியால் செதுக்கப்பட்ட வரிகள் சுமார் 6௦௦ டிகிரி வெப்பம் ஏற்படும் வரை உருகாது.அதனால் உலகம் போற்றும் இந்த உன்னத திருக்குறள் எந்த சூழ்நிலையிலும் அழியாமல் இருக்கும்.

மொத்த திருக்குறளையும் தயாரிக்க செலவுகள் அதிகம். உழைப்பும் அதிகம். தமிழ் ஆர்வலர்கள் சிலர் என்னிடம் ஒருசில திருக்குறளை கேட்டு முன்வந்தனர். ஆனால், இந்த ஒட்டுமொத்த திருக்குறளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 



இந்த வெள்ளி திருக்குறள் வேண்டும் என்பவர்கள், ‘9787750916’ இந்த தொலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒட்டுமொத்த தமிழர்களாலும் போற்றப்பட வேண்டிய திருக்குறளை நம்மவர்கள் சிலர் மறந்துபோயிருக்கும் இந்த நேரத்தில், வேற்று மொழி பேசும் ஒருவர் திருக்குறளை போற்றி வணங்குவது சற்று சுருக்கென்று உள்ளதல்லவா? 

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...