தங்கத்திருக்குறளை வெள்ளிகளால் அலங்கரிக்கும் சுந்தரத் தெலுங்கர்!

உலகப்பொதுமறையாம் திருக்குறள் முக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக்களை உள்ளடக்கியது என்பது உலகறிந்த ஒன்று. உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றி வணங்க வேண்டிய திருக்குறளை அரசு பேருந்துகளின் சன்னல் ஓரங்களிலும் பள்ளி புத்தகங்களிலும் மட்டுமே பார்க்க கூடிய சூழல் உருவாகிவிட்டது. ஆனால், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் திருக்குறளிலுள்ள முப்பாலின்பால் ஈர்க்கப்பட்டு இந்த கருத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள் என்று கூறி திருக்குறளை வெள்ளிகளால் செதுக்கி வருகிறார்.



தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் சூர்யவர்மன். கடந்த 2004ம் ஆண்டு தனது  குடும்பத்துடன் கோவை வந்த சூர்யவர்மன் ஆபரணங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து முறையாக தொழில் கற்றவர். இன்று கோவை பெரிய கடை வீதியில் சொந்தமாக நகை வேலைப்பாடுகள் செய்து வருகிறார். மோதிரங்கள், தங்க சங்கிலிகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொடுத்து அதை மேலும் மெருகூட்டும் பணி செய்து வந்த இவருக்கு திருக்குறள் மீதான ஆர்வமும் பக்தியும் அதிகரித்தது.

உலகமே கொண்டாடப்பட வேண்டிய திருக்குறளை தன்னால் முடிந்தவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று எண்ணிய இவர், வெள்ளிகளை கொண்டு திருக்குறள் வரிகளை செதுக்க ஆரம்பித்தார். இதுவரை 110 திருக்குறள்களை வெள்ளியால் செதுக்கிய இவருக்கு தமிழ் மொழியை எழுதவோ அல்லது படிக்கவோ தெரியாது என்பது ஆச்சரியம் கலந்த உண்மை.



இது குறித்து சூர்யவர்மன் கூறியதாவது :-

9ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு கோவை வந்து இந்த தொழிலை கற்றுக் கொண்டேன். எப்போதும் ஒரே வேலையை செய்து கொண்டிருப்பதில் எனக்கு மிகுந்த சலிப்புத்தன்மை உண்டானது. இத்துறையில் சாதனைகள் பல படைக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போதுதான் திருக்குறளை வெள்ளியில் செதுக்க முடிவு செய்தேன்.

வார்ப்பிலிருந்து எடுத்த வெள்ளி தகடுகளில் முதலில் திருக்குறளை எழுதினேன். அதில் எந்த ஒரு வார்த்தைப் பிழையும் இல்லை என்பதை தமிழ் படிக்கத் தெரிந்தவர்களை வைத்து உறுதிபடுத்திக்கொள்வேன். பின்னர், வெள்ளித் தகடுக்களில் இருக்கும் வார்த்தைகளை சிறுது சிறிதாக செதுக்கி இந்த வெள்ளித் திருக்குறளை உருவாக்கி வருகிறேன். இந்த வேலைகளை இயந்திரங்கள் உதவிகளின்றி முழுக்க முழுக்க கைகளால் தயாரித்து வருகிறேன்.

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு திருக்குறளை வெள்ளித்தகடுகளில் செதுக்கி முடிக்க 3 மணி நேரம் எடுத்துக் கொள்வேன். இந்த கடையில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை வெள்ளித் திருக்குறள் தயாரிக்க செலவிட்டு வருகிறேன். ஒரு எழுத்துக்கு 300 மில்லிகிராம் வரை வெள்ளி தேவைப்படுகிறது. சுமார், 30 ஆயிரம் ரூபாய் இதற்காக செலவு செய்து 110 திருக்குறள்களை தயார் செய்துள்ளேன். தொடர்ந்து, 1330 திருக்குறள்களையும் தயாரிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். வெள்ளியால் செதுக்கப்பட்ட வரிகள் சுமார் 6௦௦ டிகிரி வெப்பம் ஏற்படும் வரை உருகாது.அதனால் உலகம் போற்றும் இந்த உன்னத திருக்குறள் எந்த சூழ்நிலையிலும் அழியாமல் இருக்கும்.

மொத்த திருக்குறளையும் தயாரிக்க செலவுகள் அதிகம். உழைப்பும் அதிகம். தமிழ் ஆர்வலர்கள் சிலர் என்னிடம் ஒருசில திருக்குறளை கேட்டு முன்வந்தனர். ஆனால், இந்த ஒட்டுமொத்த திருக்குறளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. 



இந்த வெள்ளி திருக்குறள் வேண்டும் என்பவர்கள், ‘9787750916’ இந்த தொலைபேசி எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒட்டுமொத்த தமிழர்களாலும் போற்றப்பட வேண்டிய திருக்குறளை நம்மவர்கள் சிலர் மறந்துபோயிருக்கும் இந்த நேரத்தில், வேற்று மொழி பேசும் ஒருவர் திருக்குறளை போற்றி வணங்குவது சற்று சுருக்கென்று உள்ளதல்லவா? 

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...