பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசுபேருந்து மீது சொகுசு கார் மோதிய விபத்தில், அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த புதுமாப்பிள்ளை பாலாசுகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்டு விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாலாசுகேஷ் (வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பாலாசுகேஷுக்கும் பொள்ளாச்சி ஜமீன்கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த யாஷிகா (வயது23) என்ற பெண்ணிற்கும் அடுத்த வாரம் திருமண நிச்சயம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், நேற்று யாசிகாவை பார்க்க பொள்ளாச்சி வந்த பாலாசுகேஷ் வெளியில் சுற்றி பார்க்க செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து, யாசிகா மற்றும் பாலாசுகேஷ் இருவரும் தனது சொகுசு காரில் ஆழியாரை சுற்றி பார்க்க சென்றனர்.
அப்போது வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து மீது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கிய இருவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், படுகாயமடைந்த பாலாசுகேஷ் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்துக்கு வந்த ஆழியார் காவல்நிலைய போலீசார் பாலசுகேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த வாரத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த நிலையில், மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் இரு குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.