கோவை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தொட்டியை உடைத்து குட்டி யானையை மீட்டு உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.
கோவை: கோவை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குட்டி யானை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட பாலமலை செல்லும் வழியில் நாயக்கன் பாளையம் கிராமம் உள்ளது அந்த கிராமப் பகுதியில் நடிகர் சத்யராஜின் தங்கை அபராஜிதா என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீட்டின் வெளியே கீழ்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது.
இந்த தொட்டியில் வனப் பகுதியில் உள்ள யானைகள் அவ்வப்போது வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், அதுபோல 3 நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த இளம் வயது உடைய ஒரு குட்டி யானை ஒன்று அந்த தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், பெரிய நாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
இதனையடுத்து, இறந்த யானையை மீட்க முயன்ற போது, 11 யானைகள் அடங்கிய கூட்டம் அங்கு வந்தது. மேலும் இரவு என்பதால் உடனடியாக இறந்த யானையை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இறந்த யானையை எடுக்க பொக்லைன் எந்திரம் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து வலை மூலம் இறந்த குட்டி யானையை மீட்டனர்.
அதன்பிறகு குட்டி யானையை பொக்லைன் எந்திரத்தில் போட்டு அங்கிருந்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு யானையை உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு யானையின் உடலை புதைத்தனர்.